Tamilnadu

“மாமுல் தரலைன்னா வெட்டுவோம்” : கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சா போதையில் ரவுடிகள் வெறிச்செயல் !

சென்னை நெற்குன்றம் பெரியார் காய்கறி சந்தையில், காய்கறி கடை வைத்து நடத்தி வருபவர் செல்வராஜ். இந்த கடையில் கடந்த 5 வருடமாக முருகேசன் (47) என்பவர் வேலை செய்து வந்தார். இவரது குடும்பத்தினர் அனைவரும் என் எஸ் கே நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் கடை ஊழியர்கள் முருகேசன் மற்றும் முருகன் (26) ஆகிய இருவரும் கடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக கையில் அரிவாளுடன் கடைக்குள் புகுந்த இருவர் மாமுல் தரலைன்னா வெட்டுவோம் என்று கூறி, மாமுல் கேட்டு மிரட்டி முருகேசன் மற்றும் அவருடன் இருந்த முருகன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அப்போது இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதை பார்த்ததும் அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதில் ஒரு நபர் தப்பித்துச் செல்ல கஞ்சா போதையில் இருந்த மற்றொரு நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் முருகேசன் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிடிபட்ட நபரிடம் போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் வியாசர்பாடி, கேனடி நகர், 5- வது தெரு சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் அவர், மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், தனது நண்பர்களுடன் கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு நேரத்தில் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயலை வழக்கமாக கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் குறித்தும் தப்பி ஓடிய மற்றொரு நபர் குறித்தும் கோயம்பேடு போலிஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பொம்மை துப்பாக்கியை வைத்து தாய்மகனை கொன்ற வடமாநில கொள்ளையர்கள்: சூடுபிடிக்கும் சீர்காழி இரட்டை கொலைவழக்கு