Tamilnadu

தாய் மகனைக் கொன்று 16 கிலோ தங்கம் கொள்ளை - வீடுபுகுந்து நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு

சீர்காழியில் நகை கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி ( 50). இவர் தர்ம குளத்தில் நகைக் கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.

இன்று காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில்( 25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். 6:30 மணிக்கு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார். கதவைத் திறந்ததும் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைத் தாக்கி வீட்டிற்குள் புகுந்துள்ளது. ஆஷா அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர், அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள் மற்றும் 30 கிலோ வெள்ளி, சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் காரையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து காயமடைந்த தன்ராஜ் சவுத்ரி அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர் இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 👆