Tamilnadu

10 ஆண்டுகளாக நீர் நிலைகளை தூர்வாராத அதிமுக அரசு.. மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மயிலாடுதுறை கிராம மக்கள்!

மயிலாடுதுறையில் குளங்கள், வடிகால்களை 10 வருடமாக தூர்வாருதல் மற்றும் இரண்டு மாத காலங்களாக தேங்கி இருக்கும் மழை நீர் அப்புறப்படுத்து பணி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க எவ்வளவு முறை மனு கொடுத்தும் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்துர் ஊராட்சி கழுக்கானிமுட்டம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீநகர் தெருவில் கடந்த இரண்டு மாத காலமாக பெய்த கனமழையால் அங்குள்ள குளம் மற்றும் வடிகால்களை சுமார் 10 வருடமாக தூர்வாராததால் முழுவதுமாக நீர் நிரம்பி தண்ணீர் ஸ்ரீநகர் பகுதிக்குள் முழங்கால் வரை முழுவதும் தேங்கி நிற்கிறது. ஸ்ரீ நகர் பகுதியில் மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது குளம்போல் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் சென்று வர முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் ஒரு சில வீடுகளில் உள்ளவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர். இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் வீட்டில் வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே அப்பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும் தேங்கியுள்ள மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் . மேலும் முறையான வடிகால் அமைத்து தண்ணீர் போகும்படி வசதி செய்து தர வேண்டும் என்பது ஸ்ரீநகர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அடிப்படை தேவைகளான தெருவிளக்கு சாலை வசதி ஆகியவை அமைத்து தர வேண்டும் என்றும் ஸ்ரீ நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “விளக்குமாறில் கொள்ளையடித்த ஆட்சி இது” - எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!