Tamilnadu

பொதிகையில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," பிரசார்பாரதி பொது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து செயற்கைக்கோள் சேனல்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் பொதிகை தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை வாசிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதோடு நடைமுறையும் படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறின்றி சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக மட்டும் ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

சமஸ்கிருத மொழியை விட பழமையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்காததோடு, தமிழகத்தில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை வாசிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, "மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம். இதனை விட பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளன என தெரிவித்தனர். தொடர்ந்து, தேவையெனில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Also Read: ஐ.ஐ.டியிலும் சமஸ்கிருத திணிப்பு : மாணவர்களிடையே விபரீத பரப்புரையில் ஈடுபடும் பா.ஜ.க அரசு!?