Tamilnadu

“கலைஞர் செய்ததை ஜெயலலிதா செய்ததாக பொய் பேசிய அ.தி.மு.க அமைச்சர்” : முகம் சுளித்து சென்ற பொதுமக்கள் !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான நலதிட்ட நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் மாற்றுத்திறனாளிகளுக்கு அ.தி.மு.க அரசு சாதனை செய்ததுபோல பொய் மூட்டையை அவிழ்த்து பேசினார்.

தி.மு.க ஆட்சியின் போது, முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஊனமுற்றவர்கள் நலத்துறை என்றிருந்ததை, மாற்றுத்திறனாளிகள் நலதுறை என பெயர் மாற்றி மாற்றுத்திறனாளிகள் வாழ்கையில் முன்னேற்றம் அடைய அதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி அதை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்து திட்டங்களை செயல்படுத்தினார்.

அதுமட்டுமல்லாது, ஊனமுற்றவர்கள் என்ற வாசகத்தையை இனி யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும், அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்றழைக்கப்பட வேண்டும் என அரசாணையையும் கலைஞர் பிறப்பித்தார். அந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையும் மாற்றுத்திறனாளிகள் என்றே உலகம் முழுவதும் அழைக்கப்பட வேண்டும் என அறிவித்து கலைஞரை பாராட்டியது.

ஆனால், இந்த வரலாறு எதுவும் தெரியாமல், ஊனமுற்றவர்கள் என்ற பெயரை ஜெயலலிதா தான், மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றியதாகவும், மாற்றுதிறனாளிகளுக்கு யாருமே செய்யாததை செய்தார் என பேசினார்.

அமைச்சர் இப்படி நாகூசாமல் பொதுமக்கள் மத்தியில் பொய் மூட்டையை அவிழ்த்து பேசுவதைக் கண்ட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலைஞர் செய்ததை ஜெயலலிதா செய்ததாக அமைச்சர் பொய் பேசுவதாகவும், பொய்களையும் கோமாளித்தனமான பேச்சுகளை பேசுவது அ.தி.மு.க அமைச்சர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல என முகம் சுளித்து சென்றனர்.

Also Read: “விறுவிறுப்பாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு” : சீறிப்பாயும் காளைகளை வீரத்தோடு அடக்கும் காளையர்கள்!