Tamilnadu

“விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த நபர்” : 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அறிந்து அதிர்ந்துபோன மனைவி!

தலையில் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி போலிஸில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (29) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் மேட்ரிமோனியல் தளம் மூலம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் ராஜசேகர் மனைவியுடன் இணைந்து வாழ்வதில் ஈடுபாடின்றி இருந்து வந்துள்ளார். கணவர் தன்னோடு மகிழ்ச்சியாக இல்லாததால் அப்பெண் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.

திருமணமாகி 5 ஆண்டுகள் கழிந்த நிலையில், ராஜசேகர் அணிந்திருந்த விக் கழன்று விழுந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார் அப்பெண். இத்தனை ஆண்டுகளாக தன்னிடம் வழுக்கை குறித்து சொல்லாமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த அவர், இதுகுறித்து திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தலையில் முடி இருப்பது போல விக் வைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொண்டதோடு, வரதட்சணையும் வாங்கிக்கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

அப்பெண் அளித்த புகாரின் பேரில் மோசடியாக திருமணம் செய்துகொண்ட ராஜசேகர் மீதும் அவரது பெற்றோர் மீதும் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பியது சீரம்... 16ம் தேதி தடுப்பூசிக்கு தயார்!