Tamilnadu
“முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு - சிங்கள அரசிற்கு தக்கபாடம் புகட்ட வேண்டும்” : தலைவர்கள் பேச்சு!
இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.
அப்போது, சிங்கள துணைத் தூதரகமே சென்னையை விட்டு வெளியே, இனக் கொலை குற்றவாளியே வெளியேறு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்து கொண்டு, வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள்.
பின்னர், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, “முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னத்தை இடித்து இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் இந்திய அரசு வஞ்சகம் செய்கிறது. கட்சி, மதம்,சாதியை கடந்து நாம் ஒன்றிணைவோம். இலங்கை தூதரகத்தை நான் முற்றுகையிட்ட போகும் போது, என்னை போலிஸ் கைது செய்யலாம்.
இன்று முடியாமல் போகலாம். என்னைவிட சக்தி வாய்ந்த, துடிப்பு மிக்க லட்சக்கணக்கில் இளைஞர்கள் வருங்காலத்தில் வந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு சென்னையில் இருந்து வெளியேற்றுவார்கள்” என அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், “சிங்கள இனவாத அரசிற்கு எச்சரிக்கையை விடுக்கும் விதமாக இங்கு முற்றுகை போராட்டம் நடக்கிறது. தமிழர்களை அழிப்பதற்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிங்கள அரசிற்கு தக்கபாடம் புகட்ட தயாராக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், “இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வரலாறு இங்கு நடந்து இருக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இலங்கை அரசு அங்கு என்ன செய்தாலும் அதற்கு இங்கு எதிர்வினைகள் இருக்கும் என்பதை மறந்து விட கூடாது.
எனவே காலம் வரும்போது இந்த செயல்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக ரீதியாக மீண்டும் ஈழம் தலைதூக்கும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்போம்” என்று பேசினார்.
அதனையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் முயன்றனர். அவர்களை போலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரன், வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!