Tamilnadu

“குழந்தைங்க இருக்கு விட்டுருச் சொல்லி கெஞ்சுனேன்...”: நாகை கோயிலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் நல அமைப்பினர் குற்றச்சாட்டியுள்ளனர். குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச உள்ளிட்ட வடமாநிலங்களில், சிறுமிகள், இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியிலும், பெண்கள் மீது நடக்கும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதில் ஒன்றாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலில் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அடுத்த நாகத் தோப்பு பகுதியை சேர்ந்த கணவனை இழந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கட்டட கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தினந்தோறும் பணியை முடித்து இரவு நேரத்தில் அவரது சகோதரி வீட்டில் தங்குவது வழக்கம்.

நேற்று இரவு காமராஜர் காலனி வழியாக சகோதரி வீட்டிற்கு ராணி சென்ற போது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அவரை தாக்கி, அருகே இருந்த விநாயகர் கோவிலுக்குள் இழுத்து சென்று (இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை) கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

” எனக்கு குழந்தைங்க இருக்கு என்ன விட்டுருங்கன்னு கெஞ்சுனேன். ஆனா, அவங்க என்ன 3 மணி வரை விடலை.” என்று தனக்கு நடந்த கொடுமையைக் கூறி கதறுகிறார் அப்பெண்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட ராணி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என இந்த கொடூரச் செயலைச் செய்த இளைஞர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனிடையே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ராணி.

புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாலியல் வன்கொடுமை செய்த பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண் ராஜ், தாமரைக் குளத்தை சேர்ந்த ஆனந்த் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

Also Read: “கோயிலுக்கு வந்த 50 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை” : உ.பி-யில் தொடரும் கொடூரம்!