Tamilnadu

“தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவ படுகொலை” : கரூரில் இளைஞரை கல்லால் அடித்து கொலை செய்த கொடூரம்!

கரூர் வஞ்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகன் ஹரிஹரன். 23 வயதான ஹரிஹரன் அந்த பகுதியிலேயே சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் மகளை ஹரிஹரன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

வேறு ஒரு சாதியை சேர்ந்தவர் என்பதால் பெண்ணுக்கும் வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறுமாதமாக ஹரிஹரனுக்கு அந்த பெண் பேசாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 6ம் தேதி புதன்கிழமை பிற்பகலில், கரூர் ஈஸ்வரன் கோயிலுக்கு வருமாறு ஹரிஹரனை அவரது காதலி செல்போன் மூலம் அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு ஹரிகரன் நண்பர்கள் மூன்று பேருடன் சென்றுள்ளார்.

அங்கு காதலியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியும் கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக ஹரிஹரனை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கரூர் நகர காவல்நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை, கொலை செய்த பெண்ணின் உறவினர்களான தந்தை வேலன், சித்தப்பா சங்கர், தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கரூரில் பட்டபகலில் கோயில் முன்பு காதலர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500க்கும் அதிகமான சலூன் கடைகளை அதன் உரிமையாளர்கள் மூடி உயிரிழந்த ஹரிஹரனுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஹரிஹரன் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Also Read: “கோயிலுக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை” : எடப்பாடி ஆட்சியில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு?