Tamilnadu

“பேச்சுவார்த்தையை முறையாக நடத்துக; ஊதிய பலன்களை வழங்கிடுக”-போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, எல்பிஎஃப், சிஐடியு, ஏஐடியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்எஃப், உள்ளிட்ட தொழிற்சங்கங்ககளைச் சேர்ந்தவர்கள் பல்லவன் இல்லம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொமுச பொருளாளர் நடராஜன், “தமிழகத்தில் போக்குவரத்துத்துறையை வலுப்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழக நிர்வாகம் பயன்படுத்திய ஊழியர்களின் பணம் சுமார் 7 ஆயிரம் கோடியை உரிய கணக்கில் செலுத்த வேண்டும்.

சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை உரிய கணக்கில் செலுத்த வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணப்பலனை வழங்கவேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம்.

தொழிலாளர்களின் பல்வேறு பலன்கள் பறிக்கப்பட்டுள்ளது. நியாயமாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தையில் வழக்கமாக கலந்துகொள்ளும் போக்குவரத்து துறை அமைச்சர் கலந்துகொள்ளவில்லை. குழு உறுப்பினரான நிதித்துறை சார்ந்த வரும் கலந்துகொள்ளவில்லை.

எங்களின் கோரிக்கை மீது உருப்படியாக விவாதம் நடத்தப்படாமல் கூட்டம் முடிந்தது. அரசு உடனடியாக சுமுக தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை?” : காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!