Tamilnadu

முறைகேட்டுக்கு வழிவகுக்கும் தபால் வாக்கு முறையை ரத்து செய்யக்கோரி தி.மு.க வழக்கு : ஐகோர்ட் புதிய உத்தரவு!

80 வயது முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க அனுமதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தி.மு.க தொடர்ந்த வழக்குகளுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலின்போது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தபால் வாக்கைப் பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிதான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அரசுக்கு பொருளாதாரச் சுமை அதிகரிக்கும் எனக் கூறி, தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் துரை என்பவர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், 80 வயதுக்கு மேலானவர்களை சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை எனவும், இந்த புதிய நடைமுறை கள்ளஓட்டுக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 86 வயது முதியவர் துரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். மாற்றுத்திறனாளிகள் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார்.

தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த புதிய நடைமுறை காரணமாக ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும் என்றும், இதன் மூலம் 30 சதவீதம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

Also Read: “ஜனவரி 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட கால அவகாசம் நீட்டிப்பு” - தி.மு.க அறிவிப்பு!