Tamilnadu

ஆன்லைன் கடன்: உரிமையாளர்களே விதிகளை வகுப்பது சட்ட விரோதம் - RBI, கூகுளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்!

கடன் செயலி மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது இது வருத்தத்திற்கு உரியது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "வளர்ந்து வரும் நவீன காலத்தில் செல்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் RBI அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற கடன் பெறுவதற்கு பல்வேறு செயலிகள் புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு விளம்பரம் செல்போன் மூலம் செய்ய வருகின்றது. செல்போன் செயலி மூலம் கடன் பெறுபவர்களுக்கு அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. செல்போன் செயலிகளில் கடன் தரும் அவர்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை.

இவ்வாறு கடன் பெற்று கடன்களை சரியாக செலுத்தாத நபர்களின் விவரங்கள், புகைப்படங்களை வாட்ஸ்-அப் செயலியில் உள்ள குழுக்களில் பகிர்வது, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்கின்றனர்.

இந்த கடன் செயலிகள் கூகுள் செயலி மூலம் பஜாஜ் பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50க்கும் மேற்பட்ட செயலிகள் கடன்களை வழங்கி வருகின்றனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்த செயலியில் கடன் பெற்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழக ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

கடன் வழங்கும் பல செயலிகள் சீனாவில் மறைமுகமாக செயல்படுவது தெரிய வருகிறது. இவர்கள் இந்தியாவில் உள்ள சிலர் மூலம் வங்கி பரிவர்த்தனைகளிலும் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆர்பிஐ இணையதளம் மற்றும் செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் , இதுபோன்ற சட்ட விரோதமாக செயல்படும் செயலிகளுக்கு தடை விதிக்க நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி ஆன்லைன் ரம்மி போன்று தற்போது இந்த கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்து வருகின்றது. இதனால் இளைஞர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு தற்கொலைகள் நடந்து வருகின்றது. எனவே சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்த பண பரிமாற்ற பரிவர்த்தனைகளை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும் என வாதிட்டார்.

Also Read: கடனை திருப்பி செலுத்தாததால் அவதூறு பரப்பி மிரட்டிய ஆன்லைன் நிறுவனம்.. கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை!

அப்போது நீதிபதிகள் தற்போது செயலி மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது இது வருத்தத்திற்கு உரியது. செயலி மூலம் கடன் பெறுவதில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் இருந்து வருகிறது.

1) செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கியுள்ளனர். இது சட்ட விரோதம்.

2) கடன்களை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர். இவை இரண்டும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவது இல்லை.

எனக்கூறிய நீதிபதிகள் மனு குறித்து ஆர்பிஐ ஆளுநர், கூகுள் நிறுவனம், மத்தியநிதித்துறை செயலர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.