Tamilnadu

உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 27ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பிரிட்டனில், பரவத் துவங்கியுள்ளது. மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோதும், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கொரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதுவகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்து நிபுணர் குழு ஆலோசனைகளை பெற்று, அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Also Read: “மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி - சரிவைச் சந்தித்த ஏற்றுமதி”: வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!