Tamilnadu

அரசு தரும் ரூ.2500 பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலம் திரும்பவும் அரசுக்கே வரும்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!

தமிழக அமைச்சரிகளில் சர்ச்சை பேச்சுக்குப் பெயர் பெற்றவர்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். திண்டுக்கல் சீனிவாசனிடம் இருந்து சர்ச்சையை பிரிக்க முடியாது என்ற அளவுக்கு இவரின் பேச்சுகள் இருக்கும்.

குறிப்பாக, ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய்’ எனக் கூறி அ.தி.மு.க மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். பாரத பிரதமர் மோடி என்பதற்குப் பதிலாக மன்மோகன் சிங் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டி.டிவி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என்று சொல்லி மிரள வைத்தார். கடந்தவாரம் கூட மினி கிளினிக் திறப்பு விழாவில், காந்தியை சுட்ட கோட்சே என்பதற்கு பதிலாக, இயேசு நாதரை சுட்ட கோட்சே எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதேபோல் திண்டுக்கல் அருகே மினி கிளினிக் துவக்க விழா நிகழ்ச்சியில் குடிமகனுக்கு வழங்கப்படும் காசு டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசு கஜானாவுக்கே வரும் எனப் பேசி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பையான்பட்டியில் நேற்று இரவு அரசின் மினி கிளினிக் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த அ.தி.மு.க தொண்டர் ஒருவர், “பொங்கல் பரிசு தொகுப்பிற்கான, கூப்பன் தனக்கு கிடைக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சீனிவாசன், “இந்த டாஸ்மாக்கோட பெரிய கொடுமையா போச்சு.. எப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார் பாரு?” என சிரித்தார் இவருக்குக் கொடுக்கப்படும் காசு மீண்டும் (டாஸ்மாக் மூலம் ) நமக்குதுதான் வரும். இவரு காசு எங்கேயும் போகாது. அரசாங்கப் பணம் அரசாங்கத்துக்கே வந்து சேரும்” என பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க அமைச்சர் இதுபோல பேசியது அ.தி.மு.கவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன்” : ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பேச்சு!