Tamilnadu

“அரசு மருத்துவக் கல்லூரியிலேயே 9.6 லட்சம் வரை கட்டண கொள்ளை”: அதிமுக அரசைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

கொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒருமாதம் ஆகும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி 23வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு, தனிச் சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து 23வது நாளாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி போராட்டத்தின் ஒருபகுதியாக, கட்டணம் என்ற பெயரில் மாணவர்கள் கழுத்து நெரிக்கப்படுவதை உணர்த்தும் விதத்தில், கழுத்தில் சுருக்கு பட்டை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் கூறுகையில், “இக்கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 9.6 லட்சமும் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 5.5 லட்சமும் அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் பல் மருத்துவ முதுநிலை மாணவர்களுக்கு ரூபாய் 8 லட்சமும், இளநிலைக்கு ரூ 3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், முற்றிலும் அரசு நிதியில் மக்களுக்காக, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமானது, பிற அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை விட, 30 மடங்கு கூடுதலானது.

கூடுதல், கல்விக் கட்டணத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, அந்தக் கட்டணம் செலுத்தவில்லையெனில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாது, வகுப்பறையில் அனுமதிக்க முடியாது என்று அச்சுறுத்தும் செயல்களில் கல்லூரி நிர்வாகம் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக முதல்வர் மருத்துவ மாணவர்களின் நலன் காக்க உடனடியாகத் தலையிட்டு, பிற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

Also Read: ’கிராமப்புற மாணவர்களை துரத்தவே 225% கட்டண உயர்வு’: புதுச்சேரி மாணவர் போராட்டத்தைக் கலைக்க போலிஸ் அராஜகம்!