Tamilnadu

“திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி இல்லை?” - விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வு தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு :

“கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

2) திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

3) நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளைப் பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளிமாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடரும்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

மேலும், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாகத் தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (ஜனவரி 16) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் நிலையில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு நடிகர் விஜய் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படாததன் மூலம் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Also Read: கொரோனா திரிபு: இன்னொரு ஊரடங்கு மோசமான நிலையை ஏற்படுத்தும் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!