Tamilnadu

“காப்பாற்றச் சென்ற இடத்தில் காவலரால் நிகழ்ந்த உயிர்பலி” : தீ விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு !

தமிழக - கேரள எல்லையான நெய்யாற்றங்கரை அருகே நெல்லிமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜன்( 45) மற்றும் அவரது மனைவி அம்பிளி(36). கூலிவேலைக்குச் செல்லும் ராஜனுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் தீர்ப்பு ராஜனுக்கு எதிராக வந்தது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் போலிஸார் அவர் தங்கி வந்த குடிசை வீட்டை ஜப்தி செய்ய, ராஜனின் வீட்டுக்கு வந்து நடவடிக்கை மேற்கொள்ள முயன்றனர்.

அப்போது, தனக்கு மேல் முறையீடு செய்யவும், தீர்ப்புக்கு தடை ஆணை பெறவும் சில நாட்கள் அவகாசம் வேண்டும் என ராஜன் கேட்டுள்ளார். அதிகாரிகள் அதனை தர மறுக்கவே, மாற்று வீடு தேட கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், அதிகாரிகள் இதனை அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜன், தனது மனைவியை சேர்த்து நிறுத்தி தலையில் பெட்ரோலை ஊற்றி, தீ கொளுத்தி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். இதைபார்த்த போலிஸார் ஒருவர், ராஜனின் கையில் இருந்த லைட்டரை தட்டி பறிக்க முயன்ற போது எதிர்பாராமல் தீ உடலில் பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.

பின்னர், இருவரையும் மீட்டு தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ராஜன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஊர் மக்கள் ராஜனின் உடலை அவர் வசித்து வந்த வீட்டின் அருகில் பிரச்சனைக்குரிய இடத்தில் அடக்கம் செய்தனர்.

அதேநேரத்தில், ராஜனின் மனைவி அம்பிளியும் சிகிச்சை பலனின்றி, நேற்றைய தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக நெய்யாற்றங்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பாடப்புத்தகங்களை எடைக்கு போடும் எடுபிடி அரசு, பேரிச்சம்பழத்துக்கு கூட தேறாது” - உதயநிதி ஸ்டாலின் சாடல்!