Tamilnadu

அமைச்சர்கள் படம் போட்டு டோக்கன் வழங்க மக்கள் வரிப்பணம் என்ன அவர்கள் சொத்தா? - அதிமுகவை சாடிய துரைமுருகன்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி, இளையநல்லூர், மோல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது பொதுமக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கினோம். இன்று வரை அது பழுதாகாமல் தரமான பொருளாக உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் பொது மக்களுக்கு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவை வழங்கிய இரண்டே மாதங்களில் பழுதாகி உள்ளது. திமுக ஆட்சியில் தரமான பொருட்களை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் கமிஷனைப் பெற்றுக்கொண்டு தரமற்ற பொருளை வழங்கியுள்ளனர் என்று உரையாற்றினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, பெரியார், அம்பேத்கர், காந்தி சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் பிறப்பால் மனிதராக இருந்தாலும் குணத்தால் மிருகங்கள். இதையெல்லாம் அரசு பார்த்துக்கொண்டிருக்க கூடாது. அவர்களை கண்டிக்க வேண்டும். கண்டிக்கும் அக்கறை இந்த அரசுக்கு கிடையாது. சாயாம் அடிப்பது யார் என்றும் அவர்களுக்கு தெரியும். நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும் தொடங்காததும் உடல் நிலை, மனநிலை, சூழ்நிலையை பொறுத்தது. அதில் நுழைந்து நாங்கள் எந்த கருத்துக்களையும் சொல்ல விரும்பவில்லை.

என்னுடைய சொத்து மதிப்பு விவரத்தை என்னுடைய தேர்தல் மனுதாக்கலிலேயே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அவர்கள் தவறான முறையில் சொத்துக்களை ஈட்டியுள்ளார்கள் என்பதை விசாரிக்க கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். பொங்கல் பரிசை அரசு அலுவலர்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதிமுககாரர்கள் டோக்கன் போட்டு, மந்திரி படம் போட்டு கொடுக்க இது அவர்கள் (அப்பன் வீட்டு) சொத்தா என கேள்வி எழுப்பினார். முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை என முதலமைச்சர் கூறியது குறித்து கேட்டதற்கு, "சர்வம் ஜெகத்மயாம்" என துரைமுருகன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சுனில் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Also Read: “முதற்கட்ட ஊழல் புகார்களுக்கே இவ்வளவு பதற்றம் வேண்டாம்” - முதல்வர் பழனிசாமிக்கு துரைமுருகன் பதிலடி!