Tamilnadu

“பொங்கல் பரிசு டோக்கன் தொடர்பாக அவசர சுற்றறிக்கை வெளியிடுக”: திமுக தொடுத்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

பொங்கல் பரிசு 2,500 ரூபாய்க்கான அதிகாரபூர்வமான டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக அவசர சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கள் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசுத்தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அ.தி.மு.க கட்சியின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். அதில், மக்களின் வரிப்பணத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசு திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக அ.தி.மு.க-வினர் சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பரிசுத்தொகை போய்ச் சேராது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்தனர்.

அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு 2,500 ரூபாய் வழங்குவது தொடர்பாக நாளை தமிழக அரசு அவசர சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசு நாளை சுற்றறிக்கை வெளியிடவில்லை என்றால் மீண்டும் தி.மு.க உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Also Read: “மக்களின் வரிப்பணத்தை அ.தி.மு.கவின் கட்சிப் பணத்தை போல வழங்குவதா?” - பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!