Tamilnadu

“குப்பைகளை கொட்டி ஏரியை சூறையாடும் அ.தி.மு.க அரசு” : பல்லாவரம் புத்தேரியை பாதுகாக்க திரண்ட பொதுமக்கள்!

சென்னை பல்லாவரம் நகராட்சி, ஜமீன் பல்லாவரத்தில் புத்தேரி உள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை அமைக்கப்பட்ட போது இந்த ஏரி இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏரியின் ஓரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது அதிகளவிலான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் புகார் அளித்தும் ஆளும் அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால், ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஏரி தற்போது புதர் மண்டி, குட்டை போல் காட்சியளிக்கிறது.

இதனால் மேலும் ஏரியை ஆக்கிரமித்து விடும் சூழல் இருப்பதால் புதர் மண்டி, குட்டை போல் காட்சியளிக்கும் புத்தேரி ஏரியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்கள் ஏரியில் குப்பைகளைக் கொட்டிச் செல்வதாகவும், அரசு உதவியுடன் இந்தச் சம்பவம் அரங்கேறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

அதன்படி நேற்றைய தினம் பெரிய லாரி முழுவதும் கொண்டுவந்த குப்பைகளை ஏரியில் கொட்டுவதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடிக்க முயன்றுள்ளனர். அப்போது மக்கள் கூடுவதற்குள் லாரி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

எரியில் குப்பைகளைக் கொட்டி ஏரியை சூறையாட முயற்சிப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலிஸார் கூடியிருந்த மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “சமீபகாலமாக இந்த ஏரியை கொள்ளையடிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு அரசும் உடந்தையாக இருந்து வருகிறது.

ஏற்கனவே இந்த ஏரியில் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த அ.தி.மு.க அரசு முயற்சித்தது. அந்தத் திட்டம் மக்கள் எதிர்ப்பால் தேல்வி அடைந்தது. இந்நிலையில் 10.48 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தற்போது 5 ஏக்கர் மட்டுமே உள்ளது. நீர் வளத்தை உண்டாக்கும் இந்த ஏரி தற்போதும் கழிவுநீர் மற்றும் குப்பை சேகரிக்கும் இடமாக மாறியுள்ளது.

ஏற்கனவே ஏரியை ஆக்கிமித்துள்ளதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் 400 அடிக்கும் கீழே சென்றுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மேலும் ஏரியை முழுமையாக மூடிவிட்டு என்ன செய்ய காத்திருக்கிறது ஆளும் அரசு? இது யாருக்கான செய்யப்பட்டது என பல கேள்விகள் எழுகின்றன.

எனவே அரசு ஏரியைப் பாழாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஏரியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆசாதி முழக்கம் எழுப்பிய மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதிவு” : உ.பி-யில் தொடரும் அராஜகம்!