Tamilnadu

“ரேசன் கடைகளில் இருந்து சுண்டல், பயிறு கடத்தல் - ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு?” : போலிஸ் விசாரணை!

தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க நியாயவிலைக் கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ வீதம் சுண்டல் பயிறு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 5 கிலோவும், மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் நியாய விலை கடை ஊழியர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வீதம் சுண்டல் பயிறு வழங்கி மீதமுள்ள சுண்டல் பயறை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப் பட்டியில் கடை எண் 8 நியாய விலை கடையில் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ சுண்டல் பயிரை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக கடத்த முயற்சி செய்தபோது அப்பகுதி பொதுமக்கள் கடத்தலை தடுத்து நிறுத்தி சுண்டல் பயிரை பறிமுதல் செய்தனர்.

சுண்டல் பயிரை கைப்பற்றிய பொதுமக்கள் ராயப்பன்பட்டி காவல் துறையினர் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் சுண்டல் பயிறை கைப்பற்றி கடத்த முயற்சி செய்த நியாயவிலை கடை ஊழியரை தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான நியாய விலை கடை பொருட்களை சுருளிப்பட்டி நியாய விலை கடையில் அடிக்கடி ரேஷன் அரிசி, சக்கரை போன்றவைகள் கடத்தப்படுவதாகிறது. ஆளும் கட்சியின் துணை இல்லாமல் இதுபோல குற்றச்சம்பவங்களில் ஈடுபட முடியாது.

முறையாக விசாரித்தால் ஆளும் கட்சி பிரமுகர்கள் பலர் சிக்குவார்கள் எனவும் எனவே வட்ட வழங்கல் அதிகாரி அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவரும் இந்த கடத்தலை தடுத்து பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்களை நியாயமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Also Read: “வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை” : உதயநிதி ஸ்டாலின் உறுதி!