Tamilnadu

காவல் ஆய்வாளர் தாக்கியதால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்.. சிபிசிஐடி விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் மனைவி வழக்கு!

காவல் ஆய்வாளர் அடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மரணமடைந்தது குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரியும் அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காமராஜர் சாலை அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி பிரேமா என்பவர் தொடர்ந்த மனுவில், “வழக்கு ஒன்று விசாரணைக்காக தனது கணவரை கடந்த 6 ஆம் தேதி ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் சரவணன் அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

எட்டாம் தேதி கிளை சிறையில் சென்று பார்த்தபோது தனது கணவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரை ஆய்வாளர் சரவணன் விசாரணை என்று அடித்து சித்திரவதை செய்து இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி தனது கணவர் மரணம் அடைந்து விட்டதாகவும் பின்னர் இந்த வழக்கு சந்தேகத்திற்குரிய மரணம் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு நடைபெற்றதாகவும் ஆனால் காவல் ஆய்வாளர் சரவணன் தாக்குதலில் தான் தனது கணவர் மரணம் அடைந்துள்ளார்.

எனவே இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். காவல் ஆய்வாளர் சரவணனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் பாதிக்கப்பட்ட தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நாளை மறுதினத்திற்குள் பதில் அளிக்க தமிழக அரசு, காவல்துறை ஆகியோர் உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

Also Read: செல்வமுருகன் கஸ்டடி மரண விவகாரம் : அதிர்ச்சி தரும் புதிய ஆதாரங்களை வெளியிட்ட வேல்முருகன்!