Tamilnadu

கனிமங்களை காக்க வேண்டிய அதிகாரிகள் தாமிரபரணியில் இருந்து மணல் அள்ள அனுமதி வழங்கியது ஏன்? - ஐகோர்ட் கிளை

தாமிரபரணி ஆற்று மணலில் அணு சக்தி கனிமங்களும், பல அரிய கனிமங்களும் இருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அகரம் கிராமத்தில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடை பெறுகிறது என்றும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது, அதில் தாமிரபரணி ஆற்று மணலில் பல கனிமங்கள் உள்ளன. மேலும் அணு சக்திக்கு தேவையான கனிமங்களும் உள்ளன. இவை அறிய வகையில் கிடைக்கும் கனிமங்கள் போல தெரிகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், "கனிமங்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள், எவ்வாறு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கினார்கள் என தெரியவில்லை. வழக்கறிஞர் ஆணையர் தாமிரபரணி ஆற்றில் கனிமங்களும் அணுசக்தி கனிமங்களும் பல அரிய கனிம வளம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் தான் ஒரு புவியியலாளர் என்னும் அடிப்படையில் தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து மத்திய அணுசக்தி துறை செயலர், பொதுப்பணித்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணலை எடுக்க கூடாது, எனவும், அவ்வாறு எடுக்கப்பட்ட மணலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்கவும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 21 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் ஆணையருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை தலைவர் உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கலாமே?”- அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை!