Tamilnadu

“மதுரையில் எய்ம்ஸ் அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? " - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி, பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்காத நீதிபதிகள், “இரண்டு ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என தகவல்கள் வருகின்றன. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா?

வழக்கில் இரண்டு மாதங்களாகியும் முறையாக பதில் தராதது வருத்தமளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், சுகாதார செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என எச்சரிக்கை விடுத்தனர்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளதால், காலதாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும், அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: கனிமங்களை காக்க வேண்டிய அதிகாரிகள் தாமிரபரணியில் இருந்து மணல் அள்ள அனுமதி வழங்கியது ஏன்? - ஐகோர்ட் கிளை