Tamilnadu

இருவேறு வங்கிகளில் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.5 கோடிக்கும் மேல் கடன் பெற்று மோசடி - தம்பதியர் கைது!

சென்னையில் இருவேறு வங்கிகளில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 3 கோடிக்கும் அதிகமாக வியாபார கடன் பெற்ற தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாசாலையில் அமைந்துள்ள சவுத் இந்தியன் வங்கியில் சிந்தாதிரிப்பேட்டை பெட் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கிளாட்சன் மற்றும் அவரது மனைவி ஜெயசீலி இருவரும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 3 கோடியே 25 லட்சம் வியாபார கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சவுத் இந்தியன் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் ஜலாலுதீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் கிளாட்சன் மற்றும் ஜெயசீலி தம்பதியினர் திருவொற்றியூர் மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் தங்களுக்கு சொந்தமாக இடம் இருப்பதாக போலி ஆவணம் சமர்ப்பித்து கடன் பெற்றது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி தங்களது மீன் வியாபாரத்தை மேம்படுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அடையாறு கிளையில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூபாய் 2 கோடி கடன் பெற்று செலுத்தாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாக வங்கியின் நெருக்கடி தாங்க முடியாமல் அதேபோல் மற்றொரு போலி ஆவணத்தை அண்ணா சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் சமர்ப்பித்து 3 கோடியே 25 லட்சம் ரூபாய் வியாபார கடன் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தலைமறைவாக இருந்த கிளாட்சன் மற்றும் ஜெயசீலி தம்பதியினரை தீவிரமாக தேடி வந்த நிலையில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலி ஆவணம் தயார் செய்து கொடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “மதுரையில் எய்ம்ஸ் அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? " - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!