Tamilnadu

மின்வாரிய பணிகள் தனியார்வசம் ஒப்படைப்பு - அ.தி.மு.க அரசின் அறிவிப்பால் ஐ.டி.ஐ படித்த மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழக மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப மின்துறை உத்தரவிட்டுள்ளதால் ஐ.டி.ஐ படித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தனியார்மயத்தையே தமது கொள்கையாகக் கொண்டு செயல்படுவதைப்போல, தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசும், பொதுத்துறைகளை தனியார்வசம் ஒப்படைத்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும் 30,000 இடங்கள் தனியாருக்கு செல்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் பணியமர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி, ஒவ்வொரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கியது தமிழக மின்துறை.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஐ.டி.ஐ படித்து பல இளைஞர்கள் மின் வாரியத்தில் பணி கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளித்துள்ளது.

Also Read: “SI தேர்வில் இடஒதுக்கீடு இல்லை..? தி.மு.க கொண்டுவந்ததால் அலட்சியப்படுத்துவதா..?” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!