Tamilnadu

கிடப்பில் உள்ள திட்டங்களை புறக்கணித்து புதிய திட்டங்களை திறக்கும் எடப்பாடி.. வேதனையில் பெரம்பலூர் மக்கள்!

கொரோனா ஆய்வுக் கூட்டம் எனும் பெயரில், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.24.41 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.19.25 கோடி மதிப்புள்ள 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 1,614 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதற்கு இன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் எல்லாம் அவர் வரும் வழியெங்கும் இரவு, பகலாக சரி செய்யப்பட்டு பளபளப்பாக்கப்பட்டிருக்கிறது. பாலக்கரையில் உள்ள ரவுண்டானாவை 5 அடி உயரத்தை இரவோடு, இரவாக திடீரென இடித்துத் தள்ளி விட்டு தற்போது அந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய ராட்சத பேனர்களை வைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ரவுண்டானா எதிர் புறத்தில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எடப்பாடி செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து வேலைகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், ஜவுளிப் பூங்கா, மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்களும், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.4 கோடி மதிப்பிலான 504 குடியிருப்புகள் பணிகள் முடிந்து 1 வருடமாகியும், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டும் வேண்டுமென்றே எதையோ எதிர்பார்த்து அதிகாரிகள் இந்த திட்டத்தை மறைத்து கிடப்பில் போட்டுள்ளதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Also Read: எடப்பாடியின் விளம்பர வெறியால் தொடரும் உயிர்பலி: கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி பலி!