Tamilnadu

“இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இன்று எழுத்து தேர்வு” : மையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டு காவல் துறையில், மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு 685 ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என 3,099 பேர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 6,545, சிறை துறைக்கு 7 பெண்கள், 112 ஆண்கள் என, 119 பேரும், தீயணைப்பு துறைக்கு 458 ஆண்கள் என, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 17ல் வெளியிட்டது. இப்பணிகளுக்கு, www.tnusrbonline.org என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களில், 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்பட 37 மாவட்டங்களில் 499 தேர்வு மையங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எழுத்து தேர்வு சரியாக காலை, 11:00 மணிக்கு துவங்கி மதியம் 12.20 க்கு நிறைவு பெறும்.

சென்னையில் மட்டும், அண்ணா பல்கலைகழகம், பச்சையப்பன் கல்லுாரி உள்பட, 35 மையங்களில், 29 ஆயிரத்து, 981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

தேர்வர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். முக கவசம் இல்லாதவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

இன்று நடைபெறவுள்ள எழுத்து தேர்வை முன்னிட்டு சென்னை அண்ணா பல்கலை கழகத்தில், தேர்வு எழுத வருபவர்களின் உடல் வெப்ப நிலையை அறிய தெர்மல் ஸ்கிரீன், கிருமி நாசினி ஆகியவை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Also Read: “வேளாண் சட்டங்களை ஆதரித்த எடப்பாடி பழனிச்சாமி ஒரு போலி விவசாயி” : கார்த்திகேய சிவசேனாபதி சாடல்!