Tamilnadu

“முதல்வர் எடப்பாடி, ‘பச்சைத் துண்டு பழனிச்சாமி அல்ல; பச்சைத் துரோகி பழனிச்சாமி’ ”: ராஜகண்ணப்பன் விளாசல்!

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” தேர்தல் பிரச்சார பயணத்தை தி.மு.க தேர்தல் பணிக்குழு இணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3-வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராஜகண்ணப்பன் நேற்று காலையில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி உடன்குடி உள்ளிட்ட பகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டார் தொடர்ந்து மாலையில் குலசேகரபட்டினம் பன்னம்பாறை உள்ளிட்ட பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் குறைகளையும் மனுக்களை பெற்றுக்கொண்ட ராஜகண்ணப்பன், தி.மு.க ஆட்சி விரைவில் ஏற்பட்டவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பொது மக்களுடன் அமர்ந்து தேநீர் கடையில் தேநீர் அருந்திய அவர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து குலசேகரபட்டினம் பன்னம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் விவசாயிகள் மற்றும் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ராஜ கண்ணப்பன், “விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் மூன்று வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு டெல்லியில் தொடர்ந்து 15 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால், நான் ஒரு விவசாயி என தெரிவித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்.

அதனால், பச்சைத் துண்டு பழனிச்சாமி அல்ல பச்சைத் துரோகி பழனிச்சாமி. மேலும், மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கப் போவது உறுதி” என தெரிவித்துள்ளார்.

Also Read: “விவசாயிகள் கண்ணியமாக வாழ தேவையான அனைத்தையும் திமுக செய்யும்” : தேர்தல் பரப்புரையில் திருச்சி சிவா உறுதி!