Tamilnadu

சர்வதேச மனித உரிமை நாள் : “மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 15 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று உலக மனித உரிமை தினம் அனுசரிக்கப்பட்டுகிறது. 1948-ம் ஆண்டில் உலக நாடுகள் ஒன்றிணைந்து கொண்டுவரப்பட்ட மனித உரிமை பிரகடனத்தை ஐ.நா ஏற்றுக்கொண்ட இந்த நாளில், விவசாயிகளின் உரிமைக்கான போராட்டம் தலைநகரில் நடைபெறுகிறது.

2020-ம் ஆண்டின் மனித உரிமை தின கருப்பொருளாக ‘சிறப்பாக மீண்டெழுவோம், மனித உரிமைகளுக்காகத் துணை நிற்போம்’ என்பதை ஐ.நா சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “இந்தியா முழுவதும் விவசாயப் பெருங்குடி மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். கொரோனா காலம் என்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்!

மக்கள் உரிமைகள் முதல் மாநில உரிமைகள் வரை பட்டப்பகலில் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம்! மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிகள் செய்து கை கொடுத்த தி.மு.க MLA” : தஞ்சை கிராம மக்கள் நெகிழ்ச்சி !