Tamilnadu

வேளாண் சட்டத்துக்கு எதிரான ‘பாரத் பந்த்’ எதிரொலி: தமிழகத்தில் 1 லட்சம் போலிஸார் குவிப்பு!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த பாரத் பந்தால் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் பாதிப்படையாமல் இருக்கவும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள அனைத்து காவலரும் பணிக்கு வரவேண்டும் என காவல்துறை சார்பில் அறிவித்துள்ளனர்.

அதனையொட்டி, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழு அடைப்பு காரணமாக ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல சென்னையில் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று இரவே வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, மத்திய படையும் குவிக்கப்பட்டுள்ளது.