Tamilnadu

காஞ்சியில் வெறும் 2 இடங்களை பார்வையிட்டுவிட்டு ஆய்வை முடித்த மத்திய குழு - திமுக MLA கடும் குற்றச்சாட்டு!

நிவர், புரெவி புயலால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள அளவிற்கு நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கும் உரிய இழப்பீட்டை மத்திய குழு பெற்று தரவேண்டும் என திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான CVMP எழிலரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மத்திய அரசு குழு ஆய்வு செய்தது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விஷார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான CVMP எழிலரசன் மத்திய குழுவுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

விஷார் பகுதியில் புயலால் சேதமடைந்த நெற்பயிர்களை மத்திய குழுவினருக்கு காட்டி சேதங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். இதையடுத்து நரப்பாக்கம் பகுதியில் மத்திய குழுவினரின் வாகனங்கள் சென்றப்போது மத்திய குழுவினரின் வாகனங்களை அப்பகுதி விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களக்கு சொந்தமான சேதமடைந்த நெற்பயிர்களை காட்டி தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள அளவிற்கு நெசவாளர்களும் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கும் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கூறி மத்திய குழுவிடம் திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான CVMP எழிலரசன் அவர்களும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் அவர்களும் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான CVMP எழிலரசன் கூறியதாவது, நிவர் மற்றும் புரெவி புயல்களால் பெய்த கன மழையினால் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெருமளவு விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது . இவற்றையெல்லாம் மேற்பார்வையிட வந்த மத்திய குழுவுடன் இணைந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் இணைந்து ஆய்வில் பங்குகொண்டு பாதிக்கப்பட்டதை எடுத்துரைத்தோம் .

நாங்களும் இவர்கள் முறையாக ஆய்வு செய்வார்கள் என்று எண்ணி அவர்களுடன் சென்றபோது அவர்கள் 2 இடங்களை மட்டுமே பார்த்துவிட்டு ஆய்வு முடிந்து விட்டதாக கூறி சென்று விட்டார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பு பெரிய அளவில் ஆகி இருக்கிறது. ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் முறையாக ஆய்வு செய்யவில்லை. காஞ்சிபுரத்தில் அருகில் இருக்கும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட எந்த இடத்திற்கும் அவர்கள் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.

Also Read: புயல் பாதிப்பு: மத்திய நிதிக்காக காத்திருக்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கீடு செய்க -மு.க.ஸ்டாலின் அறிவுரை

அறுவடை செய்யப்பட்டு மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் கொள்முதல் அரசு நேரடியாக கொள்முதல் செய்து அதற்கான இழப்பீடு தொகை வழங்கும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் காஞ்சிபுரத்தை பொருத்தவரை தாம்பல் மற்றும் கோவிந்தவாடி அகரம் ஆகிய இரண்டு இடத்தில் மட்டுமே அவர்கள் கொள்முதல் செய்திருக்கிறார்கள் மற்ற இடத்தில் இன்னும் கொள்முதல் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

எந்த அளவிற்கு விவசாயிகள் பாதிப்பு அடைந்தார்களோ அதேபோல காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் மிகவும் பாதிப்படைந்து அவர்கள் நெசவு செய்ய முடியாத சூழல் இருந்து வருகிறது. அவர்களையும் கருதில் கொண்டு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவர்களை பார்வையிட்டு அவற்றை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தும் அவர்கள் அதில் அக்கறை காட்டாமல் சென்றது வருந்தத்தக்க விஷயம் என குறிப்பிட்டார்.

ஆகையால் இவற்றை எல்லாம் மேற்கோளிட்டு நாங்கள் மனுவாக அவர்களிடம் கொடுத்து உள்ளோம். தமிழக அரசு கொடுத்திருக்கும் புள்ளி விவரங்கள் சரியாக இருக்கிறதா என தெரியவில்லை. நானும் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து மனுக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கு மதிப்பிற்கு ஏற்றவாறு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Also Read: புயல் பாதிப்புகளை போட்டோவில் பார்த்துவிட்டுச் சென்ற மத்தியக் குழு.. குறைகளை கேட்காததால் மக்கள் வேதனை!