Tamilnadu

“செப்டிக் டேங்கில் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் பலி” : கழிப்பறை வசதி இல்லாததால் நடந்த அவலம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி சண்முகம் என்பவரின் இளைய மகள் சரண்யா (24). மாற்றுத்திறனாளி பெண்ணான சரண்யா, கடின உழைப்பால் கடந்த 2 ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்று, காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில், இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சரண்யா பணி செய்யும் அரசு வேளாண்மை விரிவாக்கம் மையத்தில், கழிவறை வசதிகள் கூட இல்லாத நிலையில், அரசு செயல்படுத்தியுள்ளது. பலமுறை கழிவறை வசதிகளை அமைத்துக்கொடுக்கும் படி, அங்குள்ள ஊழியர்கள் அரசிடம் வழியுறுத்தியுள்ளனர். ஆனால், அரசு உயரதிகாரிகள் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இதனால் மிகுந்த சிரமங்களை சந்தித்த சரண்யா, “அலுவகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், பணிக்குப்போக விருப்பமில்லை” என பலமுறை தனது பெற்றோர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். இந்நிலையில், வேளாண்மை மையத்தில் கழிவறை வசதி இல்லாத காரணத்தால், அருகில் உள்ள பொதுமக்களின் வீட்டிற்கு கழிவறை சென்றுள்ளார்.

மழைக்காலம் என்பதால் அப்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. அப்போது கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது வெறும் ஓட்டை வைத்து மூடியுள்ளனர். இதனையறியாத சரண்யா, மழைகாலம் என்பதால் ஓட்டின் மீது தெரியாமல் ஒரு காலை வைத்துள்ளார்; அதில் ஓடு உடைந்து 8 அடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்க் தொட்டில், தவறி விழுந்துள்ளார்.

கழிவறைக்குச் சென்ற சரண்யா வெகுநேரமாக திரும்பி வராததால், சந்தோகம் அடைந்த சக ஊழியர்கள் தேடிய போது செப்டிக் டேங்க் தொட்டியில் சரண்யா கிடந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரண்யா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சரண்யா பலியானதற்கு காரணமான, கழிவறை இல்லாத அரசு அலுவலகத்தை செயல்படுத்திய, மாவட்ட ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும், குற்றவியல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வழியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “வீடுகள் தோறும் கழிவறைத் திட்டம் என மத்திய மாநில அரசுகள் கூறிவரும் நிலையில், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற அலுவலகங்களில் கழிவறை இல்லாததால், அரசு ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்களும், அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களும் குறிப்பாக பெண்களும், பெரும் சிரமத்திற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள்.

இயற்கை உபாதைகளைக் கழிக்க, அலுவலகத்திற்கு அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு, வெட்கத்தை விட்டுச் செல்லும் வேதனையான கொடுமைகள் தொடர்வதை தவிர்த்திட, கழிவறை இல்லாத அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், உடனடியாக கழிவறைகள் அமைத்திட, மத்திய மாநில அரசுகள் கவனம் கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்வழிக் கல்வி பயின்றவருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு?”: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!