Tamilnadu

“தூர்வாரும் பணியில் அதிமுக அரசின் ஊழல் அம்பலம்?; மதகு உடைந்து 5,000 ஏக்கர் பாதிப்பு”: விவசாயிகள் வேதனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது களமருதூர். இந்த கிராமத்தில் மிகப்பெரிய சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி உள்ளது. இதை முற்கால அரசர்கள் நேர்த்தியாக வடிவமைத்து விவசாயத்தை பாதுகாத்தனர்.

நீர்மட்ட அளவை கண்காணிக்க சோழர்கள் அமைத்த குமிழித்தூம்புகளை இன்றும் நாம் காண முடியும். ஆனால் தற்போதைய அ.தி.மு.க அரசு விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் ஏரியை முறையாக சீரமைக்காமல் சாலை விரிவாக்க பணியின் போது மதகு பகுதியை மாற்றாமல் அப்படியே விட்டு விட்டனர்.

தற்போது ஏற்பட்ட நிவர் புயலின் தாக்கத்தின் காரணமாக, மதகு அடித்துச் செல்லப்பட்டு பெரும்பான்மையான ஏரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த கிராமத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இந்த கிராமத்தில் உள்ள ஏரி பாசனத்தை நம்பியே உள்ளது. கடந்த சில மாதங்களாக ஏரியில் மதகு சீரமைக்கும் பணி பொதுப்பணித் துறையால் நடைபெற்றது.

முறையாக தரமான மதகுகள் அமைக்கப்படாததால், தற்போது பெய்த கனமழை காரணமாக ஏரியின் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனை கண்ட அந்த கிராம மக்கள் மணல் மூட்டைகளை கொண்டு நீர் வெளியேற்றத்தை தடுத்தனர்.

அதன்பின்னர் பொதுப்பணித் துறை அலுவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து மேலும் சில மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறாமல் தற்காலிகமாக தடுத்தனர். தரமான மதகுகள் கட்டப்படாததே இதற்கு காரணம் என அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெகுவான தண்ணீர் வெளியேறிய நிலையில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் இந்த ஏரிப்பாசனத்தை நம்பியே இருக்கிறது என்றும் இதனால் இந்த ஆண்டு விவசாயம் பெரிய அளவு பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read: “கண்டுகொள்ளாத மோடி அரசு - பெட்ரோல், டீசல் விலை 10-வது நாளாக அதிகரிப்பு” : சிரமத்தில் வாகன ஓட்டிகள்!