Tamilnadu

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு : நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்!

அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் 2000-ஆவது ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றம்

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 50% ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசு மற்றும் சில மருத்துவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு புதன்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில் நாளை (நவ.,27) உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்கவுள்ளது.

Also Read: பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை: ஆளுநருக்கு தமிழக அரசு ஏன் ஆலோசனை வழங்கவில்லை? - உச்ச நீதிமன்றம் கேள்வி!