Tamilnadu

“தி.மு.க பரப்புரையை முடக்க அ.தி.மு.க சதி” - திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் கைது!

2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க தேர்தல் பரப்புரை இன்று முதல் துவங்கியுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார்.

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தைத் துவங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து மக்கள் திரளோடு தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று நமது தி.மு.க தலைவர் ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ எனக்கூறி முதல்வர் பதவியேற்கப் போவது உறுதி. அராஜக - அநியாய அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க-வை துரத்தியடித்ததைப் போல வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, போலிஸார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். கைது நடவடிக்கையைக் கண்டித்து தி.மு.கவினர் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “இந்த ஆட்சியின் ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிற வேலையைத் தொடங்கியிருக்கிறோம். அதைத் தடுக்கும் வகையில் எங்களைக் கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. நாளை திட்டமிட்டபடி தேர்தல் பரப்புரை நடைபெறும்.” எனத் தேரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினரின் கைதை கண்டித்து தஞ்சையில் அண்ணா சிலை அருகே 300 க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலிஸார் கைது செய்தனர்.

Also Read: 75 நாட்களில் 15,000 கி.மீ பயணம் : ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.க பரப்புரை!