Tamilnadu

KV பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கு வலுக்கும் எதிர்ப்பு.. அவசர விசாரணை கோரி ஐகோர்ட்டில் முறையீடு!

மதுரையைச் சேர்ந்த பொன்குமார் சார்பில் அவரது வழக்கறிஞர் அழகுமணி, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார்.

"தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படாது. 6 ஆம் வகுப்பிலிருந்தும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு, விதி உருவாக்கி அறிவித்துள்ளது.

அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள், வாரத்தில் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிடவேண்டும் என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அதற்கு நீதிபதிகள் அதனை மனுவாகத் தாக்கல் செய்ய அனுமதித்து, விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Also Read: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனை விதிப்பதா?: பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!