Tamilnadu

“மருத்துவ கலந்தாய்வில் அ.தி.மு.க பேனர்கள்”: அரசு நிகழ்ச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் எடப்பாடி அரசு!

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு வைத்து, தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. சுமார் 16 ஆயிரம் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களில், நாடு முழுவதும் 57 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில் அந்தந்த மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தொடங்கும் பணி நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை விரைவில் தொடங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், நீதிமன்றம் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

அதன்படி, கலந்தாய்வில் பங்கேற்க 24,712 பேர் விண்ணப்பித்த நிலையில், 23,707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும் நேற்று முன்தினம் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான (7.5%) உள் இடஒதுக்கீட்டு பட்டியல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டன.

அத்துடன் மேற்கண்ட 3 பட்டியல்களில் முதல் 10 இடங்கள் பெற்றுள்ள மாணவ, மாணவியர் விவரம் வெளியிடப்பட்டது. பின்னர் பல்வேறு குளறுபடிக்கள் சர்ச்சைக்களுக்கு மத்தியில், மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

அதிகாலையில் இருந்தே மாணவர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு மேல், கலந்தாய்வு நடக்கும் நிலையில், கலந்தாய்வு மையங்களில் பெற்றோர்கள் தங்குவதற்கு சரியான வசதி அமைத்துக்கொடுக்காத தமிழக அரசு, அப்பகுதியைச் சுற்றி அ.தி.மு.க பேனர்களை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது மாணவர்கள் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலந்தாய்வு மையத்தில் வைக்கப்பட்ட அதிமுக பேனர்களை அகற்றிவிட்டு, மாணவர்களுக்கு பயன்படும் வகையில், அறிவிப்பு பலகைகளை வைக்கவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த பேனர் அதிமுக சார்பில் வைக்கப்பட்டதா அல்லது அரசு செலவில் வைக்கப்பட்டதா என்பதை தமிழக அரசு விளக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: செல்வமுருகன் கஸ்டடி மரண விவகாரம் : அதிர்ச்சி தரும் புதிய ஆதாரங்களை வெளியிட்ட வேல்முருகன்!