File Image
Tamilnadu

தமிழ் மொழி கற்பிக்க வாரத்தில் 2 மணிநேரம் மட்டும்தானா? - மத்திய பா.ஜ.க அரசுக்கு டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல் வகுப்பில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு, பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உடனடியாக நீக்கக்கோரி, நேற்று (13 நவம்பர் 2020) மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளளார்.

அதில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்கவும், திராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சார்பாகவும், தேசிய கல்விக் கொள்கை 2020ல் ஏற்படுத்தப்பட்ட தடைகள் குறித்து, மிகுந்த கவலையுடன் இந்த அவசரக் கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மத்திய கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்த போதிலும், அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த கல்வியாண்டிலேயே இக்கொள்கையை நிறைவேற்ற, மத்திய அரசு முடிவெடுத்திருப்பது கவலையை அளிக்கிறது.

மத்திய அமைச்சர் தனது டிவிட்டர் பதிவில், ஐந்தாவது வகுப்பு வரையிலும், முடிந்தால் எட்டாவது வகுப்பு வரையிலும் அதற்கு மேலும் பயிற்று மொழி, தாய்மொழியாகவோ அல்லது மாநில மொழியாகவோ, அரசுப் பள்ளிகளிலும் மற்றும் தனியார் பள்ளிகளிலும், தொடர்ந்து இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கேந்திரிய வித்யாலாயா நிறுவனத்தின் திருத்தப்பட்ட கொள்கையின்படி, இருபது அல்லது அதற்கு அதிகமான மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி, தற்காலிக ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டதுடன், ஆறாம் வகுப்பிலிருந்து மட்டுமே தாய் மொழி கற்பிக்கப்படுமெனவும், வாரத்தின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே தாய் மொழி கற்பிக்கப்படுமெனவும் பல்வேறு தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

தாய் மொழியை கற்பதற்கு ஏற்படுத்தப்படும் தடைகள், குழந்தைகளின் கல்வி கற்கும் திறனை வெகுவாக பாதிப்பதோடு, தாய்மொழியின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் குறைத்துவிடும். தாய் மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள், சமூக, பண்பாட்டுக் கூறுகளை வளர்த்துக் கொள்வதோடு மிக விரைவாகவும் தேர்ச்சி அடைகிறார்கள். குழந்தைகளும் பெற்றோர்களும் உரையாடுவதிலும் தாய்மொழி முக்கிய இடம் பெறுகிறது. எனவே, இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி கற்பிக்கப்படும் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.

Also Read: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனை விதிப்பதா?: பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ஏ-ன் படி கல்வி கற்கும் உரிமை மாணவர்களின் அடிப்படை உரிமையாகும். எனவே, தாய் மொழியை கற்க மத்திய அரசினால் ஏற்படுத்தப்படும் தடைகள், அரசியல் சட்டப்படி, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும். மத்திய அரசின் கேந்திரியா வித்யாலாயா பள்ளிகளில் தாய் மொழியை கற்பதற்கு ஏற்படுத்தப்படும் தடைகள், இந்தி மொழியை திணிப்பதற்காகவும், இந்தியாவை ஒரே மொழி நாடாக மாற்றுவதற்கும் வழிவகுக்கும் என்பதால் தமிழக மக்கள், ஒருபோதும், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

எனவே, எங்கள் தலைவரின் அறிக்கையின்படி கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளின் முதல் வகுப்பிலிருந்தே தாய் மொழியை கற்பிக்க தேவையான முயற்சிகளை உடனடியாக எடுக்கவும், தடைகளை நீக்கவும், நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும், ஆவன செய்ய வேண்டுமென்று தனது அவசரக் கடிதத்தின் மூலம் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

Also Read: “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை புறக்கணித்து வன்மம் காட்டும் பா.ஜ.க அரசு” : வைகோ கண்டனம்!