Tamilnadu

எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண் பணிக்குச் செல்ல இருசக்கர வாகனம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தானமாக பெற்ற ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரத்த சேகரிப்பு மையங்களில் போதுமான பணியாளர்கள் கிடையாது. எனவே, பாதுகாப்பான முறையில் ரத்தம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்த சேகரிப்பு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.” என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அப்பாஸ் மந்திரி, முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கு வந்தபோது, தவறுதலாக எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் ரூ.10 லட்சத்தை அப்பெண்ணின் பெயரிலும், மீதமுள்ள ரூ.15 லட்சத்தை அப்பெண்ணின் 2 பெண் குழந்தைகள் பெயரிலும் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கவேண்டும். 450 சதுர அடிக்கு குறையாமல் 2 படுக்கை அறையுடன் சுற்றுச்சுவருடன் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட பெண், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜரானார்.

அப்போது அவர் நீதிபதிகளிடம் கூறுகையில், “நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னிடம் பேசும்போதோ, என்னைக் கடந்து செல்லும்போதோ எச்.ஐ.வி. பரவிவிடுமோ என அஞ்சுகின்றனர். வேண்டா வெறுப்பாக என்னைப் பார்க்கின்றனர். பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க என்னை அனுமதிப்பதில்லை. எனவே என் வீட்டிற்குள் தனியாக குடிநீர் குழாய் இணைப்பை வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, அப்பெண்ணின் கோரிக்கையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், எச்.ஐ.வி தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண், காணொளிக் காட்சி வழியாக ஆஜராகி, தான் தினமும் பேருந்தில் வேலைக்கு செல்வதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அப்பெண்ணுக்கு பணிக்குச் செல்ல இருசக்கர வாகனம் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு - அசல் விடைத்தாளை சமர்ப்பிக்க தேர்வு முகமைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!