Tamilnadu

“அதிகாரிகளுக்கு முறையாக ‘கட்டிங்’ செல்வதால், கண்டுகொள்வதில்லை” : ஆளுங்கட்சி ஆசியோடு நடக்கும் மண் கொள்ளை !

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி, சித்தேரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இதில், 80 ஏக்கர் பரப்பளவு உடைய சித்தேரி நீரை பயன்படுத்தி, சோமங்கலம், புதுச்சேரி கிராமங்களில், 300 ஏக்கருக்கு விவசாயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், சோமங்கலம் சித்தேரியில், 65 நாள் மண் குவாரி இயங்க அனுமதி வழங்கியது. 65 நாட்கள் முடிந்து, மீண்டும் ஒரு மாதம் மண் குவாரி இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் தனியார் மூலம் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலும், ஏரியின் நீர்வரத்து பகுதியிலும் மண் எடுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது, “ஏரியில் மண் எடுப்பதற்கு கனிமவளத் துறை சார்பில், வாரம் தோறும் குறிப்பிட்ட அளவிற்கு மண் அள்ள நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, நான்கு மடக்கு அதிகமாக மண் எடுத்து விற்று கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது. கனிமவளத் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், முறையாக, 'கட்டிங்' செல்வதால், யாரும் இதை கண்டுகொள்வதில்லை.

மேலும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நீர்வரத்து பகுதியில், அதிக ஆழத்திற்கு மண் அள்ளப்படுகிறது. ஏரியில் எங்கு நல்ல மண் கிடைக்கிறதோ, அந்த இடத்தில், 20 அடி ஆழம் வரை மண் எடுக்கின்றனர். இதனால், மழைக் காலத்தில் பள்ளத்திலேயே மழைநீர் தேங்கிவிடும். எனவே, ஏரியில் பரவலாக ஒரே சீராக மண் எடுக்க வேண்டும்.

அதிகமாக லோடு ஏற்றி, தார்ப்பாய் போர்த்தாமல் செல்லும் லாரிகளில் இருந்து விழும் மண்ணால், தார் சாலைகள் மண் சாலையாக மாறி புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமம் அடைகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Also Read: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 லட்சமாக உயர்வு - பலி 1.24 லட்சத்தை தாண்டியது ! #COVID19