Tamilnadu

“பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டிப்பு” : அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதன்படி பேரறிவாளன் கடந்த அக்டோபர் 9 ம் தேதி முதல் பரோலில் உள்ளார். அவரின் பரோல் காலம் வரும் 9 ஆம் தேதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை தொடர் வேண்டியுள்ளதால் அதனை கருத்தில்கொண்டு பரோலை நீட்டிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் சரவணன் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனின் பரோலை, மேலும் இரண்டு வாரங்களுக்கு ( வரும் 23ஆம் தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: கிராம சபை வழக்கு: டாஸ்மாக்கில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்ன? - அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் குட்டு!