Tamilnadu

பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை: ஆளுநருக்கு தமிழக அரசு ஏன் ஆலோசனை வழங்கவில்லை? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

தன்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுனர் முடிவு எடுக்காதது குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் வாதித்தார். மேலும், வேறு வழி இல்லாததாலேயே மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும் வழக்கறிஞர் சங்கர நாராயணன் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல் 7 பேரை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி பரிந்துரை வழங்கியதன் மீதும் ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்துகிறார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, பேரறிவாளனை விடுவிக்கக் கோரிய கருனை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2018ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்ததோடு, சட்ட ரீதியான முடிவுகளை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், ஆளுநர் ஏன் இந்த விவகாரத்தில் இத்தனை காலமாக தாமதப்படுத்துகிறார்? அவருக்கு ஆலோசனை வழங்கக் கூடாது என தமிழக அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இடமிருந்து ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பதால் இந்த காலதாமதம் ஏற்படுவதாக வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு தலையிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி மேலும் காலதாமதப்படுத்தாமல் இதில் ஒரு முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும் என்று கூறிய நவம்பர் 23-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

Also Read: “சிறிய அளவில் பயணளிக்கும் 7.5% ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இழுத்தடித்தது வெட்கக்கேடானது” - தயாநிதி மாறன் சாடல்