Tamilnadu

தி.மு.க எம்.பி அன்றே சுட்டிக்காட்டிய நிலையில் 7.5% உள்ஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்கு பிரதமருக்கோ, உள்துறை அமைச்சருக்கோ அ.தி.மு.க அரசு அரசியல் ரீதியாக அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மூத்த வழக்கறிஞரும் தி.மு.க மாநிலங்களவை எம்.பியுமான பி.வில்சன், “அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆகவே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு 7.5 சதவீதம் வழங்க அரசாணை அச்சிடப்பட்டு ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கி உடனடியாக வெளியிட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறது” எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி கலந்தாய்வு தாமதமாகி வரும் நிலையில் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் விரைந்து செயல்பட தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காலதாமதமாக அரசாணை முடிவைச் செயல்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு.

Also Read: நீட் உள் ஒதுக்கீடு: அரசுப்பள்ளி மாணவர்களை கைக்கழுவி விடப்போகிறதா அரசு? -எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி