Tamilnadu

‘பால் வியாபாரிகளின் பாதுகாவலர்’ கே.ஏ.செங்கோட்டுவேல் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "கே.ஏ.எஸ்" என்று பால் உற்பத்தியாளர்களால் பாசமாக அழைக்கப்படும் கே.ஏ.செங்கோட்டுவேல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பால் வியாபாரிகளின் பாதுகாவலர்; ஒவ்வொரு முறையும் அரசிடமும், அமைச்சர்களிடமும் உறுதியாக - தயக்கமின்றி வாதாடி உற்பத்தியாளர்களுக்கு பால் விலையை உயர்த்திக் கொடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றியவர்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது - பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு - போராடாமலேயே பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர்!

வெள்ளையுள்ளம் படைத்த அவர், பொதுவாழ்வில் பால் போன்ற தூய்மைக்குச் சொந்தக்காரர். அவரது மறைவு பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.

கே.ஏ.எஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் - பால் உற்பத்தியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.