Tamilnadu

திண்டுக்கல்லில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு : தி.மு.க MLA கண்டனம்!

தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இந்துத்வா தலைத்தூக்க முடியாததற்கு மிக முக்கிய காரணமாக தந்தை பெரியார் விளங்குகிறார்.

இதனால், தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. நாடே போற்றும் தலைவரின் சிலையைச் சேதப்படுத்தி அதில் ஆனந்தம் அடையும் அற்ப நடவடிக்கையும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கதையாகியுள்ளது.

சமீபத்தில்கூட கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்பொழுது, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பங்காருபுரம் சமத்துவபுரத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை மீது காவிசாயம் ஊற்றி, மர்ம நபர்கள் அவமரியாதை செய்துள்ளனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பங்காருபுரம் சமத்துவபுரத்தில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை உள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் இரவு இரவு 11 மணியளவில், பெரியார் சிலையின் மீது சில சமூக விரோதிகள் காவி சாயத்தை ஊற்றி, அவமரியாதை செய்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தி.மு.கவினர், அந்த காவி சாயங்களை அகற்றி தந்தை பெரியார் சிலையை தூய்மைப்படுத்தினர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தி.மு.க பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார், பெரியார் சிலை மீது அவமரியாதைக்கு தனது கண்டனங்களை பதிவு செய்தார். மேலும், தந்தை பெரியார் சிலையை அவமரியாதை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலிஸாரிடம் புகார் அளித்தார்.

உடன் ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சு.மணி மற்றும் கழக நிர்வாகிகளும் இருந்தனர். தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றி அவமரியாதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெரியார் சிலை அமையக் காரணமான அந்த ‘ஒத்த செருப்பு’ - சுவாரஸ்ய தகவல்! #Periyar142