Tamilnadu

அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘எம்-சாண்ட் மணல்’ விற்பனைக்காக வஞ்சிக்கப்படும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் !

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவிலில் மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைத்துத் தரக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆவுடையார் கோவில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியிலுள்ள வெள்ளாற்றில் மணல் எடுத்து பொதுமக்களுக்கு வழங்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் மணல் அள்ளுவதை தடுக்கும் நோக்கில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் செயல்பட்டு, மணல் அள்ளி வருகின்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களிடம் அபராதமும் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி பெயரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல் உடைக்கும் குவாரி உள்ளது.

கல் குவாரிகள் மூலம் கிடைக்கின்ற எம்.சாண்ட் மணலை விற்பனை செய்வதற்க்காகவே இவ்வாறு அரசு அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனைக் கண்டித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி மாட்டுவண்டிக்கென மணல் குவாரி அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் வருகின்ற 28ம் தேதி ஆயிரக்கணக்கான மாட்டுவண்டிகளுடன் மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 108 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக 500 கீழ் குறைந்த உயிரிழப்பு - பாதிப்பு 79 லட்சத்தை தாண்டியது!