Tamilnadu

“ஜெட் வேகத்தில் ஆய்வு செய்தால் பாதிப்பு எப்படி தெரியவரும்?” - மத்திய குழுவினருக்கு விவசாயிகள் கண்டனம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் ஜெட் வேகத்தில் ஆய்வு செய்யும் மத்திய குழுவினருக்கு டெல்டா பாசன காவிரி உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த நெல் மழையில் நனைந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரப்பதம் காரணமாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கும் அவலமும் நிகழ்கிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவிகிதம் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது வழக்கம். ஈரப்பத சதவிகிதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடத்தி கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு மத்திய அரசுக்கு நெல்லின் ஈரப்பதத்தினை உயர்த்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மத்திய தரக்கட்டுபாட்டு அதிகாரிகள் யாதாந்திர ஜெயின், ஜெய்சங்கர் வாஷாந்த் தமிழ்நாடு வாணிப கழக முதுநிலை மேலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய குழுவினர் முறையாக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என டெல்டா பாசன காவிரி உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்திற்கு 20 இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்யவேண்டும். ஜெட்வேகத்தில் ஆய்வு செய்தால் ஆய்வு முடிவுகள் முறையாக இருக்காது, ஆகையால் 2 அல்லது 3 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தால்தான் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். எனவே முறையாக ஆய்வு செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: நேற்று இரவு பெய்த கனமழையால் சுமார் 50,000க்கும் மேலான நெல் மூட்டைகள் சேதம்.. தஞ்சை விவசாயிகள் வேதனை!!