Tamilnadu

“நாங்கள் பாஜக’காரர்கள் அப்படிதான் பேசுவோம்” - சென்னையில் நிருபர்களை ஒருமையில் பேசிய பாஜக மகளிரணி நிர்வாகி

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மகளிரணி மாநில தலைவர் மீனாட்சி நித்திய சுந்தரர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியதாக கூறி அவர் மீது புகார் அளிக்க வந்திருந்தனர்.

அப்பொழுது பா.ஜ.க தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முற்றிலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும், முகக் கவசங்கள் அணியாமலும் ஒரே இடத்தில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் கூடியிருந்தனர். அதுமட்டுமின்றி அதனை காவல்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. நேற்று வரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வருபவர்கள் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் ஒரு புகாருக்கு 40க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் பா.ஜ.க மகளிரணி நிர்வாகியிடம் கேள்விகளை எழுப்பிய செய்தியாளரை ஒருமையில் பேசியும் நாகரிகமற்ற முறையில் கூச்சலிட்டும் பேசி வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கள் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் தாங்கள் அப்படி தான் பேசுவோம் என்றும் என் பெயர் யாமினி நந்தனம் பகுதியை சேர்ந்தவர் என்றும் உரக்க பேசியாவாறு வாதம் செய்துள்ளார்.

பின்னர் அவரை அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களே அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும் அரங்கேறியது. இதனால் காவல் ஆணையர் அலுவலகத்தில் சற்று சலசலப்பு நிலவியது.

Also Read: தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!