Tamilnadu

பப்ஜி கேம் விளையாட ரூ.6.5 லட்சம் டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து திருட்டு... சிறுவனிடம் விசாரணை!

சென்னையில் அண்ணாநகரை சேர்ந்தவர் மருத்துவர் முருகேசன். இவருக்கு வயது 75. இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதால் இவரைப் கவனித்துக்கொள்ள அவர் வசிக்கும் வீட்டின் மாடியில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

அந்த பெண் அங்கேயே தங்கியபடியே டாக்டருக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில், டாக்டர் முருகேசன் சில நாட்களுக்கு முன்பு அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து அவ்வப்போது பணம் காணாமல் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த புகார் குறித்து அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகர் தலைமையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்துள்ளனர்.

இந்தநிலையில்,அந்த வீட்டில் தங்கி வேலை பார்க்கும் பெண் மற்றும் அவரது மகனுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் சொன்ன போது டாக்டர் முருகேசனின் உறவினர்கள் “அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில், டாக்டர் முருகேசனுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்காக வீட்டில் தங்கி வேலைபார்க்கும் பெண்ணின் 16 வயதுடைய மகனின் செல்போனில் தனது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் அதன் ரகசிய எண்ணைத் தெரிந்து கொண்ட தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்த சிறுவன் பப்ஜி கேம் விளையாடுவதற்காகக் கிட்டத்தட்ட ரூ.6.5 லட்சம் வரை அந்த டாக்டர் வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளது தெரியவந்தது.

ஒருவரிடம் நம்பிக்கையின் பேரில் வங்கி கணக்கின் விவரங்களைக் கொடுத்ததால் பப்ஜி விளையாட்டிற்காக ரூ.6.5 லட்சம் வரை எடுத்தது அந்த விளையாட்டின் ஆபத்தை உணர்த்துகிறது. மேலும் அந்த சிறுவனிடம் இருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.